Sunday 15 October 2017

மரண பயம் போக்கும் சிங்கிரி கோயில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர்


விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரமாக அமைந்தது நரசிம்ம அவதாரமாகும். இதில், விஷ்ணு சிங்கமுகத்துடன் தோற்றம் கொண்டு காணப்படுகிறார். இந்த அவதாரத்தின் தோற்ற பின்னணி, கூர்மபுராணம், பத்மபுராணம் உள்ளிட்ட புராணங்களில் விளக்கப்பட்டுள்ளது. காசியபமுனிவர் மற்றும் திதியின் மகனான இரண்யகசிபு தொடக்க நாள் முதலாகவே விஷ்ணுவிற்கும், விஷ்ணுவின் வழிபாட்டிற்கும் முரணாக இருந்து வந்தான். இவனின் மகனான பிரகலாதன் விஷ்ணுவின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவனாக இருந்து வந்தான். இதனை ஏற்க இயலாத இரண்யகசிபு பிரகலாதனிடம் விஷ்ணு இருக்குமிடத்தை வினவி நீக்கமற நிறைந்திருப்பவர் என்றால் அரண்மனைத் தூணில் இருப்பாரா என்று வினவி, விஷ்ணு தூணை உதைத்தார். 

இந்நிலையில் விஷ்ணு கோபமுற்றார். இரண்யகசிபு இவ்வுலகில் மனிதராலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களினாலோ, காலையிலோ, மாலையிலோ, இரவிலோ தன்னையாரும் கொல்லக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான். இதனை அறிந்த விஷ்ணு, மனிதன் அல்லது விலங்கு என்று தோன்றாமல் இரண்டும் ஒன்று சேர்ந்த நரசிம்மராக தூணில் இருந்து தோன்றினார். காலை, மாலை என்ற இரண்டும் இல்லாத அந்தி வேளையில் நீரும், நிலமும் இல்லாத அரண்மனையின் வாயிற்படிக்கட்டில் இரண்யகசிபுவை வதம் செய்தார். இரண்யனை வதம் செய்து முடித்த பின்பு பெருமாளிடம் நரசிம்ம அவதார கோலத்தை தங்களுக்கும் காட்டியருளுமாறு கோரினர். பெருமாளும் இந்த வேண்டுகோளை ஏற்று நரசிம்ம அவதாரக் கோலத்தை முனிவர்களுக்கு காட்டி அருளினார். 

விஷ்ணுவின் தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மன்  என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகாவிஷ்ணு எடுத்த இந்த அவதாரம்  உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள். அவ்வாறு வேலூர் அருகே அமிர்தி செல்லும் வழியில்  நாகநதி ஆற்றங்கரையில் உள்ள மலைமீது சிங்கிரி கோயில் உள்ளது. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் லட்சுமி நரசிம்மர், தாயாருடன் அருள்பாலித்து வருகிறார். இத்திருத்தலம் கி.பி. 8ம் நூற்றாண்டிலேயே திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற சிறப்பினை உடையதாகும்.

கோயில் கருவறையின் வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளில் உள்ள கல்வெட்டுகள் சம்புவராயர் மற்றும் விஜய நகர மன்னர்கள் ஆண்ட காலத்தை சேர்ந்தது. கி.பி. 1426ம் ஆண்டினை சேர்ந்த விஜய நகர மன்னரின் கல்வெட்டு ஒன்றில் இவ்வூரினை ஓபிளம் எனவும், இறைவனை சிங்கப்பெருமாள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சிங்கிரி கோயில் என்பது சிங்கப்பெருமாள் கோயில் என்பதன் திரிபாக கருதப்படுகிறது. இத்திருத்தலம் கி.பி. 14ம் நூற்றாண்டில் முதலாம் சம்புவராய மன்னர் ராச நாராயணன் என்பவரால் கட்டட கோயிலாக நிர்மாணிக்கப்படுவதற்கு முன்பே, கி.பி. 8ம் நூற்றாண்டில் சிறிய சன்னதியில் சுவாமி எழுந்தருளியிருந்தார். 

தற்போது விமானத்துடன் கூடிய கோயிலில் விஸ்தாரமான கருவறையில் வலது திருவடியை மடித்து, இடது திருவடியை கீழே தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கும் கம்பீரமாக காட்சியளிக்கிறார். வலது தொடை மீது தாயாரை அமர்த்தி, அணைத்தபடி இருக்கும் பெருமாள் நான்கு திருக்கரங்களோடு, மேல் இரு கரங்களில் சக்கரமும், சங்கும் ஏந்தியிருக்கிறார், கீழ் வலது கரத்தை, அபய ஹஸ்தமாக வைத்திருக்கிறார். தாயார், பெருமானின் வலது தொடையில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இந்த  திருக்கோலம் வேறு எங்கும் காணமுடியாது. மற்ற லட்சுமி நரசிம்மர் சுவாமி  கோயில்களில் தாயார், சுவாமியின் இடது தொடையில் அமர்ந்து அருள்பாலிப்பார். 

நரசிம்மரை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரிடம், பிரகலாதன் போல் நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை ‘மருத்யுவே ஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும். ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

No comments:

Post a Comment