Monday 24 July 2017

பெரியதாசரான பெரியசாமி


சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆளும் சிற்றரசருக்கு படிப்பறிவு இல்லை. ஆனால் தெய்வ பக்தியும் மக்களிடம் அன்பும் கொண்டவர். மன்னரிடம் சேஷாசல செட்டியார் என்ற பெரியவர் காரியதரிசியாக பணியாற்றினார். இவருக்கு பெரியசாமி என்ற மகன் இருந்தார். பெரியசாமி அறிவில் சிறந்தவராக விளங்கினார். மகனை அரசு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று சேஷாசல செட்டியார் விரும்பினார். ஆனால் பெரியசாமிக்கோ யாரிடமும் கைகட்டி சேவகம் செய்ய விருப்பமில்லை. எனவே, குலத்தொழிலான வளையல் வியாபாரத்திலேயே  ஈடுபட்டார்.

வியாபாரத்துடன் ஆன்மிகப் பணியையும் செய்து வந்தார். கடைக்கு வரும் பெண்களிடம், "இறைவனிடம் பக்தி செய்வதே நமது வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும்,'' என்று போதனை செய்வார். ஏழைப் பெண்களுக்கு இனாமாக வளையல்கள் கொடுப்பார். இப்படியே கொடுத்து வந்ததால் ஒரு கட்டத்தில் கடையை மூடும் நிலைமை உண்டானது.

பெரியசாமியின் தெய்வபக்தியைக் கண்டு மகிழ்ந்தாலும், வாழ்க்கைக்கு பணமும் அவசியம் என்பதை அறியாமல் மகன் இருக்கிறானே என்ற ஆதங்கமும் சேஷாசல செட்டியாருக்கு இருந்தது. மகனுக்கு புத்திமதி கூறி தான் வகித்து வந்த காரியதரிசி பதவியில் அமரச்  செய்தார்.

காரியதரிசியாக இருப்பவர்கள் குதிரையின் மீதேறித் தான் பணிக்குச் செல்ல வேண்டும் என்பது நடைமுறை. ஒருமுறை குதிரை மீதேறி பெரியசாமி செல்லும் போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் குறுக்கே குதிரை சென்றது. அவர்கள் வைத்திருந்த விளையாட்டு பொருட்கள் உடைந்து போயின. இதனால் ஆத்திரம் கொண்ட சிறுவர்கள் பெரியசாமியை கீழே தள்ளி உதைத்தனர். அவமானம் அடைந்த பெரியசாமி மிகவும் மனம் பாதிக்கப்பட்டார். 

அரண்மனை வேலையைத் துறந்து கோவிலே கதியாகக் கிடந்தார். அவரை ஊரார் பைத்தியம் என்று சொல்ல ஆரம்பித்தனர். சிலர் அவரது பக்தியின் பெருமையை உணர்ந்து "பெரியதாசர்' என்று அழைக்கத் தொடங்கினர்.

ஒருமுறை மன்னர் தன் அவைப் புலவர்களிடம், "இங்கிருந்து வைகுண்டம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?'' என்று கேட்டார். யாருக்கும் பதில் தெரியவில்லை. பெரியதாசர் போன்ற மகான்களால் தான் இதற்கு பதில் அளிக்க முடியும் என்று கூறி விட்டனர். மன்னர் பெரியதாசரை அழைத்து இதே கேள்வியைக் கேட்டார்.

பெரியதாசர் மன்னரிடம், "மன்னா! வைகுண்டம் எங்கிருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் முதலையிடம் சிக்கிக் கொண்ட தேவலோக யானையான கஜேந்திரன், தனக்கு ஆபத்து ஏற்பட்ட போது "ஆதிமூலமே' என அழைத்தது. அப்போது பெருமாள் உடனடியாக கருடனில் எழுந்தருளினார். இதிலிருந்து வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் தான் இருக்கிறது என்று தெரிகிறது அல்லவா?'' என்றார்.

இந்த விளக்கம் மன்னருக்கு மகிழ்ச்சி அளித்தது. பெரியதாசருக்கு பல வெகுமதிகள் அளித்து அனுப்பினார். ஆனால் இந்த செயல் மற்ற  புலவர்களின் மனதில் பொறாமைத் தீயை வளர்த்தது.

மன்னர் ஒருமுறை பெரியதாசரின் வாயால் தன்னைப் புகழ்ந்து பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். தன் விருப்பத்தை பெரியசாமியிடம் தெரிவித்தார். ஆனால் "நரசிம்மனைப் பாடும் வாயால் நரனாகிய உன்னைப் பாட மாட்டேன்'' என்று சொல்லி மறுத்தார் பெரியதாசர்.

இந்த பதில் மன்னருக்கு கோபத்தை வரவழைத்தது. சமயம் பார்த்துக் கொண்டிருந்த புலவர்கள், மன்னரிடம் பெரியதாசரை அடித்து துன்புறுத்தும்படி தூபமிட்டனர்.

மன்னரும் மதியிழந்து பெரியதாசரை அடிக்க உத்தரவிட்டார். கம்புகளாலும், ஆயுதங்களாலும் பெரியதாசரை அரண்மனை ஊழியர்கள் அடித்தனர். ஆனால் அவரோ ஒருநிலைப்பட்ட மனதுடன் நரசிம்மரையே தியானித்துக் கொண்டிருந்தார். எனவே அவர் மீது அடிவிழாமல் ஆயுதங்கள் நழுவி விழுந்தன. மன்னருக்கு தாசர் மீது மேலும் கோபம் அதிகரித்தது. புலிக்கூண்டில் அடைக்க உத்தரவிட்டார். அதிலும் இறை தியானத்தில் அவர் ஆழ்ந்திருந்தார். அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. இதன் பின்னும் கொடுமைகள் தொடர்ந்தன. கடைசியில் தாசரை தூக்கிலிடும்படி மன்னர் உத்தர விட்டார்.

பெரியதாசர் மீது அன்பு கொண்ட மக்கள், "மன்னர் இந்த மகானுக்கு இத்தனை கொடுமைகளைச் செய்கிறாரே..! இதனால் நாட்டுக்கு என்ன தீங்கு நேருமோ?'' என்று வருந்தினர்.

மன்னர் சபையில் அமர்ந்திருந்த போது இடியோசை போல கர்ஜனை கேட்டது. மறுவிநாடி நரசிம்மப் பெருமாள் மன்னர் முன் தோன்றினார். அதைக் கண்டதும் மன்னர் அலறியபடி அரியணையில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். 

இதற்குள் பெரியதாசரை காவலர்கள் கழுமேடைக்கு அனுப்பி விட்டனர். சுற்றி ஏராளமான மக்கள் நின்றிருந்தனர்.

பெரியதாசர் கண்களை மூடிய படி பகவானின் திருநாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார். 

அப்போது கழுமேடை திடீரென தீப்பற்றி எரிந்தது. ஓடோடி வந்த மன்னர் தாசரின் திருவடியில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். 

அப்போது பெரியதாசர், "மன்னா! என்னை விட தாங்களே பாக்கியசாலி. பக்தனான எனக்கு காட்சி தராத நரசிம்மர் அரண்மனையில் உங்களுக்கு காட்சியளித்தாரே! இதை விட வாழ்வில் வேறென்ன பாக்கியம் வேண்டும்?'' என்றார்.

ஊரெல்லாம் பெரியதாசரின் புகழ் பரவியது. ரங்கநாதர் ஒரு அந்தணர் வடிவில் வந்து பெரியதாசரை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துச் சென்றார். கோவில் அருகில் நெருங்கியதும் அந்தணர் மறைந்து விட, பெரியதாசர் ரங்கநாதரைப் பாடி மகிழ்ந்தார். அன்று நள்ளிரவில் நரசிம்மராக காட்சியளித்த திருமால், தன் திருவடியில் பெரியதாசரை சேர்த்துக் கொண்டார்.

No comments:

Post a Comment