Saturday 29 July 2017

கணவர் குணமாக தாலி காணிக்கை


கும்பகோணம்

கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து 1/2 கி.மீ. தொலைவில் உள்ள நாகேஸ்வரன் கீழவீதியில் அமைந்துள்ளது ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் விசாலமான பிராகாரம். அதையடுத்து மகாமண்டபம். இதற்கு இடதுபுறத்திலேயே அன்னை காமாட்சியின் சந்நதி உள்ளது. எதிரே கருவறையில் ஏகாம்பரேஸ்வரர் லிங்கத் திருமேனியில் மேற்கு திசை நோக்கி அருள் பாலிக்கிறார். இங்கு அருள்புரியும் அன்னை காமாட்சி பல குடும்பங்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறாள். எனவே, அன்னையையும் இறைவனையும் தரிசிக்கவும் ஆராதனை செய்யவும் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக இந்த ஆலயம் வருவதும் வேண்டுதல்களை நிறைவேற்றுவதும் தினசரி  நடக்கக்கூடிய   சம்பவமாகும்.    
      
நவராத்திரியின்போது ஒன்பது நாட்களும் அன்னை காமாட்சியை தினசரி விதம்விதமாக அலங்காரம் செய்வர். இந்த அழகு அலங்காரத்தை கண்டு தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதும். 10ம் நாள் இறைவனும் இறைவியும் குதிரை வாகனத்தில் வீதியுலா வருவதுண்டு. இறைவனின் தேவக் கோட்டத்தில் துர்க்கை, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோரை தரிசிக்கலாம். திருச்சுற்றில் மேற்கில் முருகன் வள்ளி  தெய்வானை சந்நதி உள்ளது. முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி அன்று மகா அபிஷேகம் நடைபெறும். சிறப்பு ஹோமமும் நடைபெறுகிறது. தீராத நோய்களால் அவதிப்படும் தங்கள் கணவர் குணமாக வேண்டும் என்று வேண்டாத பெண்கள் கிடையாது.  அப்படி இறைவன் அல்லது இறைவியிடம் வேண்டும் பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. 

தன் மனம் குளிர வைத்த தெய்வத்திற்கு தங்களால் முடிந்த வகையில் நன்றிக் கடனைச் செலுத்துவர். அல்லது பிரார்த்தனை செய்து கொண்டபடி வேண்டுதலை நிறைவேற்றுவர். இப்படி தங்கள் கணவர் குணமானபின் தான் வேண்டியபடி தன் கழுத்திலுள்ள மாங்கல்ய நாணில் உள்ள தாலியையே கழற்றி உண்டியலில் போட்டு நன்றிக் கடன் செலுத்தும் பெண்கள் பற்றி நாம் கேள்விப்பட்டதுண்டா? ஆம், அன்னை காளிகா பரமேஸ்வரியிடம் வேண்டிக் கொள்ளும் பெண் பக்தர்கள் இப்படித்தான் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். ராகு கால காளிகா பரமேஸ்வரி ஆலயம் இங்கு தனி ஆலயமாக உள்ளது. அன்னையின் எதிரே மகா மண்டபத்தில் நந்தியும் பீடமும் இருக்க அன்னை சாந்த சொரூபியாய் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இங்கு அருள்புரியும் ராகு கால காளிகா பரமேஸ்வரி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்று பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர்.  

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு நாட்களில் ராகு கால நேரத்தில் பரமேஸ்வரி அன்னைக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.  நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர். பௌர்ணமி தோறும் பரமேஸ்வரி அன்னைக்கு ஸஹஸ்ரநாம அர்ச்சனையுடன் விசேஷ பூஜை நடைபெறும்.  சித்ரா பௌர்ணமி அன்று அன்னைக்கு 32 திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று அன்னை சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவாள். அன்னையின் ஆலய மகா மண்டப இடதுபுறம் காசி விஸ்வநாதர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். வடக்குத் திருச்சுற்றில் நந்திகேஸ்வரர், கிழக்கு திருச்சுற்றில் ஆஞ்சநேயர் மற்றும் நவகிரக நாயகர்கள் சந்நதி உள்ளது. சிவாலயத்தில் ஆஞ்சநேயருக்கு தனி சந்நதி இருப்பது சிறப்பு அம்சமாகும். மேற்குத் திருச்சுற்றில் ராஜகணபதி தனிச் சந்நதியில் அருள்பாலிக்கின்றார். 

மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் அன்று அன்னை காளிகா பரமேஸ்வரி வீதியுலா வருவதுண்டு. அன்று அன்னைக்கு சிறப்பு ஹோமமும் நடைபெறும்.  இங்கு அன்னை காளிகா பரமேஸ்வரி சிவசக்தி சொரூபமாக, அமைதி தவழும் இன்முகத்துடன் காட்சி தருவது ஒரு சிறப்பம்சம்.  நவராத்தியின் போது வரும் வெள்ளிக் கிழமையன்று அன்னைக்கு சிறப்பு பஜை நடைபெறுவதுடன் ஜாக்கெட் துணி, மஞ்சள், வளையல்கள், குங்குமம் போன்ற மங்கையரின் மங்கலப் பொருட்களை அன்று  வரும் சுமார் 800 க்கும் மேற்பட்ட பெண்களுக்குப்  பிரசாதமாக தருகின்றனர். குழந்தை பேறு வேண்டும் மகளிர் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் வெள்ளியில் செய்த சிறிய தொட்டிலை உண்டியலில் செலுத்தி தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர்.  

அன்னை காளிகா பரமேஸ்வரி சந்நதியின் முன் உள்ள தூண்களில்  சுதை வடிவில்  அஷ்ட லட்சுமிகளும் காட்சி தருகின்றனர். கார்த்திகை மாத சோமவாரங்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் 108 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. கார்த்திகை மாத அமாவாசை அன்று இறைவனுக்கும் இறைவிக்கும் 32  திரவியங்களைக்  கொண்டு அபிஷேகம் நடைபெறுகிறது. மாசி மகத்தன்று அன்னையும் இறைவனும் மகாமக குளம் சென்று பிற ஆலய உற்சவ மூர்த்திகளுடன்  தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கு பெற்று அருள்தரும் காட்சி அற்புதமான ஒன்றாகும். குடந்தை செல்லும் போது நாமும் ஏகாம்பரேஸ்வரர்  காமாட்சியையும் ராகுகால காளிகா பரமேஸ்வரியையும் கண்குளிர தரிசித்து வரலாமே.

No comments:

Post a Comment