Wednesday 26 July 2017

மங்கல வாழ்வு தரும் அன்னை காளிகாம்பாளின் குங்கும பிரசாதம்


அம்பாளுக்கு சர்வமங்களா என்று ஒரு திருநாமம் உண்டு. அனைத்து மங்கலங்களையும் அருளும் தேவி. மங்கலங்கள் அருளும் அம்பிகையின் திருமேனியில் இருந்து தோன்றியதுதான் மஞ்சள். அந்த மஞ்சளில் இருந்து தோன்றியதுதான் குங்குமம்.

பெண்கள் மட்டுமல்ல; ஆண்களும் தங்கள் நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் அம்பாளின் குங்கும பிரசாதத்தை அணிந்துகொண்டால், எந்த ஆபத்தும் அணுகாது. குறிப்பாக திருமணமான பெண்கள் தங்கள் நெற்றியிலும், வகிட்டிலும் குங்குமம் இட்டுக் கொண்டால், பிரம்மராட்சஸ் போன்ற ஆபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.     

சிவபெருமானுக்கு விபூதி ஐஸ்வர்யமாகத் திகழ்வதுபோல், அம்பிகைக்குக் குங்குமம் ஐஸ்வர்யமாகத் திகழ்கிறது. அம்பிகையின் அருட்பிரசாதமான குங்குமத்தில் அம்பாளின் துவாரசக்திகளான ஜெயா, விஜயா ஆகியோர் இருப்பதாக ஐதீகம். எனவே நெற்றியில் குங்குமம் தரித்துக்கொண்டால், அவ்விருவரும் தேவிக்குக் காவலாக இருப்பதைப் போலவே, நமக்கும் காவலாக இருந்து சகலவிதமான ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்றுவார்கள் என்பது உறுதி.

அம்பிகையின் மேன்மையான அருட்பிரசாதமான குங்குமத்தை அணிந்துகொண்டால், அனைத்து பாவங்களும் நீங்கும் என்பதை, ‘சர்வ பாபே ப்ரமுச்யதே’ என்று காமிகா ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது. 

அம்பிகைக்குக் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டு, அர்ச்சனை குங்குமத்தைப் பிரசாதமாகப் பெற்று அணிந்துகொண்டால், வீட்டில் அனைத்து மங்கலமும் ஏற்படுவதுடன் ஐஸ்வர்யங்களுக்கும் குறைவே இருக்காது.

No comments:

Post a Comment