Friday 28 July 2017

கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு


கீதையில் கிருஷ்ணர், 

"க்ரோதாத் பவதி ஸம்மோஹ: 
ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம: 
ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் புத்தி நாஸோ
புத்தி நாஸாத் ப்ரணஸ்யதி'' என்கிறார்.

கோபத்தினால் உண்டாகும் விளைவுகள் நம்மை எங்கே கொண்டு சேர்க்கின்றன என்று தெளிவாக இந்த ஸ்லோகத்தில் விவரிக்கப் பட்டுள்ளது. கோபத்தினால் அறிவின்மை முளைக்கிறது. அறிவின்மையால் நினைவுத் தடுமாற்றம் உண்டாகிறது. நினைவு தடுமாறுவதால் புத்தி மழுங்குகிறது. புத்தி மழுங்குவதால் நாம் வீழ்ச்சி அடைகிறோம். 

பெரிய பெரிய குற்றங்களை நாம் அலசிப் பார்த்தால், அவற்றிக்கெல்லாம் மூல காரணம் கோபம் என்ற பூதம் என்பது தெளிவாகப் புரியும். 

ஒரு வினாடி கோபத்தின் பிடியில் அகப்பட்டு நாம் பேசிய கடும் சொற்கள், பிற்காலத்தில் நமக்கு எவ்வளவு தலை குனிவை தந்திருக்கின்றன என்பது நம் எல்லாருக்கும் தெரியும்.

இதோ! ஒரு கதையைக் கேளுங்க!

"கிருஷ்ணர், அவரது அண்ணன் பலராமர் மற்றும் தம்பி சாத்யகி ஆகியோர் ஒரு காட்டில் சென்று கொண்டிருந்தனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் மூவரும் ஒரு மரத்தடியில் இளைப்பாற அமர்ந்தனர். இருட்ட ஆரம்பித்ததால், இருவர் தூங்கும் பொழுது மற்றொருவர் விழித்து காவல் காக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

முதலில் சாத்யகி காவல் காத்தார். கிருஷ்ணரும், பலராமனும் உறங்கினர். 

சிறிது நேரத்தில் அந்த மரத்திலிருந்து ஒரு பூதம் கிளம்பி வந்து சாத்யகியை தொந்தரவு செய்ய ஆரம்பித்தது. சண்டைக்கு இழுத்தது. சாத்யகி மிகவும் கோபத்துடன் பூதத்துடன் குத்து சண்டை போட்டார். அவருக்கும், கரடிக்கும் கடும் காயங்கள் ஏற்பட்டன. 

சிறிது நேரம் கழித்து பூதம் மாயமாக மறைந்து விட்டது. காவல் காப்பது இப்பொழுது என்னுடைய முறை என்று கூறி பலராமர் எழுந்து அமர்ந்தார். சாத்யகியும், கிருஷ்ணரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அதே பூதம் திரும்பி வந்து பலராமரை தொந்தரவு செய்தது. பலராமரோ பெரிய வீரர். பூதத்துடன் கடும் யுத்தம் செய்தார். பூதத்தை அவர் கடுமையாக அடித்தார்.

பூதம் பயங்கர காயமடைந்தது. இருந்தாலும், பலராமரும் காயமடையவே செய்தார். 

கடைசியாக, இப்பொழுது கிருஷ்ணரின் முறை வந்தது. சாத்யகியும், பலராமாரும் பூதத்துடன் சண்டை செய்ததால் களைப்புடன் உறங்கிக் கொண்டிருந்தனர். 

கிருஷ்ணருடனும் பூதம் இறங்கி வந்து தகராறு செய்ய ஆரம்பித்தது. சண்டைக்கு இழுத்தது. கிருஷ்ணரின் கோபத்தை கிளப்பிவிட மிகவும் முயற்சி செய்தது. ஆனால் கிருஷ்ணர் கோபமே அடையவில்லை. சிரித்த முகத்துடன் பூதத்தை வரவேற்றார். 

"வருக... வருக.... தங்கள் வரவு நல்வரவு ஆகுக. நீங்கள் மாயா ஜாலங்கள் செய்பவர் என்று எனக்குத் தெரியும். நான் தூங்காமல் விழித்துக்கொண்டு இருப்பதற்காக உதவி செய்ய வந்திருக்கிறீர்கள் என்றும் எனக்கு புரிகிறது,'' என்றார்.

சாத்யகி, பலராமனைப் போல கிருஷ்ணரும் தன்னிடம் கோபப்படுவார்; சண்டை போடுவார் என்று எதிர்பார்த்த பூதத்திற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதன் கையும், காலும் ஓடவில்லை. ஒன்றும் புரியாமல் தவித்தது. அதன் மூளையும் வேலை செய்யாமல் செயலிழந்து விட்டது. எல்லா பலத்தையும் இழந்த பூதம் ஒரு சுண்டெலி போல ஆகி விட்டது. 

அதன் பிறகு நடந்தது என்ன தெரியுமா?

காலையில் சாத்யகியும், பலராமரும் கதை கதையாக இரவு நடந்த சம்பவங்களை விவரித்தார்கள். உடலில் காயப்பட்ட இடங்களை காண்பித்தார்கள்.

"உனக்கு என்ன ஆச்சு கிருஷ்ணா?'' என்று அவர்கள் கேட்டபொழுது கிருஷ்ணர் தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த பூதத்தை அவிழ்த்து வெளியே விட்டார். 

"ஐயோ.....பெரிய பிசாசாக இருந்தது, எப்படி இவ்வளவு சிறிய ரூபத்திற்கு மாறியது! எப்படி அதை அடிபணிய வைத்து பிடிக்க முடிந்தது,'' என்று அவர்கள் கிருஷ்ணரிடம் கேட்டனர். 

கிருஷ்ணர் புன்னகை புரிந்தபடியே கூறினார்... "இது பூத ரூபத்தில் வந்த கோபம் என்னும் நம்முடைய குணம் தான். கோபத்தை கோபத்தால் அடக்கவோ மேலும் மேலும் சண்டை போட்டு வெற்றி பெற முயற்சிப்பதோ முடியாத காரியம். கோபம் என்ற பூதத்தை அடக்குவதற்கு ஒரே வழி அதன் வழியில் நாம் செல்லாமல் இருப்பதே. அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணித்தால் அது வலுவிழந்து நம் கையில் தானே வந்து சிக்கும்,'' என்றார்.

ஆகா... பெரியவர்கள் கூறிய கதைகளில் இருக்கும் தத்துவங்கள் நம்மிடையே இருக்கும் பொழுது, நாம் சிறந்த மனிதர்கள் ஆவதும் நம் கையிலே தான் இருக்கிறது. கத்தியை தீட்டுவதை விட புத்தியை தீட்டுங்கள். இன்பம் பெறுவீர்கள்.

No comments:

Post a Comment