Wednesday 26 July 2017

அவன் தான் மனிதன்


காட்டில் முனிவர் ஒருவர் இருந்தார். அவருக்கு பூச்சிகளிடம் பேசும் திறன் உண்டு. ஒருநாள் ஒரு புழு அவர் இருந்த வழியே வேகமாக ஊர்ந்து போனது.
இவர் பாட்டுக்கு இருக்க வேண்டியது தானே! சும்மா இருக்காமல் அந்தப் புழுவிடம் பேச்சுக்கொடுத்தார்.

சிலருடைய குணாதிசயமே இதுதான்! "சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி' என்கிற கதையாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதே வேலை! இந்த முனிவரும் வம்புக்கென்றே புழுவிடம் பேச்சுக்கொடுத்தார்.

"ஏ புழுவே! என்ன கொள்ளை போகிறதாம்! இவ்வளவு வேகமா போறே! மெதுவா போக வேண்டியது தானே,'' என்றார்.

"சாமி! கொஞ்சம் கிழக்கே திரும்பிப்பாருங்க. அங்கே வேகமாக ஒரு வண்டி வர்றது தெரியுதா! அது என் மேல ஏறினா நான் நசுங்கிப் போயிடுவேன். என்னைக் காப்பாத்த நான் வேகமாக ஊர்ந்து கிட்டு இருக்கேன். உமக்கென்ன அதில் கஷ்டம்?'' என்றது புழு. "நீ இருந்து என்ன பண்ணப் போறே! செத்து தான் தொலையேன், உன்னாலே இந்த உலகத்துக்கு என்ன லாபம்?'' என்று புழுவிடம் சொன்னார் முனிவர். 

"சாமி! உமக்கு என் மேலே பொறாமை. அதனால் கோபத்துலே ஏதேதோ பிதற்றுகிறீர்! உம்மைப் போல நான் காலையிலே சந்தியாவந்தனம் பண்ணனுமினு கட்டாயமில்லே! மத்தியானம் சாப்பிடும் முன் சுவாமிக்கு பூஜை காட்ட அவசியமில்லே! எனக்கு சொந்தக்காரங்களையோ நண்பர்களையோ உபசரிக்கணுங்கிற தேவையுமில்லே! என் பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணுங்கிற கடமையும் இல்லே! எந்த தேவையும் இல்லாத என்னைப் பார்த்து, எல்லாத்தேவையும் கடமையும் உடைய உம்மைப் போன்ற மானிட ஜென்மங்களுக்கு பொறாமை இருக்கத்தானே செய்யும்,'' என்று சொல்லிவிட்டு வேகமாகப் போய் விட்டது அந்தப் புழு.

இந்த உலகத்திலேயே பொறாமைப்படுகிற ஒரே ஜென்மம் மனித ஜென்மம் தான். முனிவரைப் போல அடுத்தவன் என்ன செய்கிறான் என்று நாம் கவனிக்கக்கூடாது. நம் வேலையை நாம் ஒழுங்காகப் பார்த்தால் போதும். அவன் தான் நல்ல மனின். இதை விட்டு அடுத்தவர் வாழ்வில் மூக்கை நுழைத்தால் புழு கூட மனிதனை மதிக்காது.

No comments:

Post a Comment