Thursday 27 July 2017

ஸ்ரீ சாயி உருவத்திற்கு அப்பாற்பட்டவர்


சாய்பாபா என்னும் மகத்தானவர் தமது அடியவர்களை வழி நடத்துகிறார், அவர்களை தாமாகவே, தமது பண்புருவாகவே மாற்றம் செய்து கொள்கிறார். மனிதன் தானே செய்விப்பவனும், அனுபவிப்பவனும் என்று நினைத்துக்கொண்டு முடிவற்ற இடர்பாடினால் தன்னை தானே சிக்கவைத்துக் கொள்கிறான். விடுவித்துக் கொள்ளும் வழியும் அவனுக்கு புலப்படவில்லை. பாபாவின் பாதத்தில் செலுத்தும் அன்பான பக்தி ஒன்றே ஒரே வழி. ஸ்ரீ சாயி உருவத்திற்கு அப்பாற்ப்பட்டவர். கடவுள் மனித உருவில் அவதரிப்பது மனிதன் எளிய முயற்சியாலேயே சிறந்த பலனை அடைய ஏதுவாகிறது. 

ஆகையால் மனிதர்கள் கலியுகத்தில் மிக மிக அதிர்ஷ்டம் செய்தவர்கள். நினைத்த மாத்திரத்திலேயே ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் அருளானது கிடைத்துவிடும். மனிதன் கலியுகத்தில் வழி தவறி தவறானப் பாதையில் செல்லப் பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் அவற்றைப் போலவே இருமடங்கு வழிகள் ஸ்ரீ சாய்பாபாவின் கிருபையை அடையவும் உள்ளன. இதுதான் சத்தியமான உண்மை. நாம ஸ்மரணம், சாய் சத்சரித்ர பாராயணம் மற்றும் பல செயல்களும் ஸ்ரீ சாயியின் தொடர்பை ஏற்படுத்துகின்றன. 

இவ்விதமாக எல்லாவித பக்தர்களின் பாவச் செயல்களும் தீவினைகளும் ஸ்ரீ சாயியின் சைதன்யத்தை அடைகின்றன. ஸ்ரீ சாயியிடமிருந்து புண்ணியங்களும் நல்ல அதிர்வலைகளும் அவரைச் சார்ந்த பக்தர்களைச் சென்றைடைகின்றன. நம் ஊனக்கண்களுக்கத் தெரியாத போதிலும், அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். தம்மளவில் சூட்சமமாக இருந்த போதிலும், நம்மை அவர்பால் வசீகரித்து இழுக்கிறார். அவருடைய இதயத்தில் கனிந்த அன்பை கெட்டியாக பற்றிக்கொள்வோம். 

No comments:

Post a Comment