Wednesday 5 July 2017

பிரதோஷங்கள் எத்தனை வகை ?

பிரதோசம் க்கான பட முடிவு

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் சிவவழிபாடு செய்தல் மிக விசேஷம். அதோடு அன்றைய தினம் பிரதோஷ நாளாகவும் அமைந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ நேரத்தில் சிவன் கோயிலில் வழிபாடும் செய்தல் பலகோடி புண்ணியத்தை தரவல்லது. ஜாதகத்தில் மதி (சந்திரன்) நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோமவார பிரதோஷம் அன்று சிவன் கோயில்களில் அர்ச்சனைக்கு வில்வத்தளம் அளித்து வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல ஜாதகரின் மதியும் (புத்தியும்) நன்றாகும். மொத்தம் 20 வகை பிரதோஷங்கள் உண்டு. அவற்றையும் அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.

1. தினசரி பிரதோஷம்

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலம் இது. இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு ‘முக்தி’ நிச்சயம் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம்

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13வது திதியாக வரும் ‘திரயோதசி’ திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத் திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு (பறவையோடு உள்ள, பறவை சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை தலங்களில் உள்ளதுபோல்) செய்வது உத்தமம் ஆகும்.

3. மாதப் பிரதோஷம்

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13வது திதியாக வரும் ‘திரயோதசி’ திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் ‘பாணலிங்க’ வழிபாடு (பல்வேறு லிங்க வகைகளில் பாணலிங்கம் ஒரு வகை) செய்வது உத்தம பலனைத் தரும். 

4. நட்சத்திரப் பிரதோஷம்    

பிரதோஷ திதியாகிய ‘திரயோதசி திதி’யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம்

திரயோதசி திதி மட்டும் முழுமையாக உள்ள நாளில் கடைபிடிக்கும் பிரதோஷம், பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின்போது ‘சுயம்பு லிங்கத்தை’த் தரிசனம் செய்வது உத்தம பலனைத் தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப் பிரதோஷம்

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது ‘திவ்யப் பிரதோஷம்’ ஆகும். இந்நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7. தீபப் பிரதோஷம் 
  
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்து, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும். 

8. அபயப் பிரதோஷம் 

அபயப் பிரதோஷம்  என்னும் சப்தரிஷி பிரதோஷம்
வானத்தில் ‘வ’ வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, ‘சப்தரிஷி மண்டலம்’ ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசிப்பதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் அளவு பார்க்காமல் அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம்

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் ‘சனி மகா பிரதோஷம்’ ஆகும். இந்த மகா பிரதோஷத்தன்று சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும். இந்நாளில் எமனும் இப்படி தரிசனம் கண்டிருக்கிறான் என்பார்கள். 

குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள ‘தண்டீஸ்வர ஆலயம்’, திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ‘திருப்பைஞ்ஞீலி’ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள ஸ்ரீவாஞ்சியம்’ ஆலயம், கும்பகோணம்-கதிராமங்கலம் சாலையில் உள்ள ‘திருக்கோடிக் காவல்’ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், ‘மகா பிரதோஷம்’ எனப்படும். 

10. உத்தம மகா பிரதோஷம்

சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகக் கருதப்படுகிறது.
      
11. ஏகாட்சர பிரதோஷம்

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, எத்தனை முறை முடியுமோ, அத்தனை முறை  `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை ஓதுவது பக்தர்களின் வழக்கம்.  பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பலவித நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம்

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு ‘அர்த்தநாரி பிரதோஷம்’ என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம் 

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். இந்த பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. 

14. பிரம்மப் பிரதோஷம்

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவமும், தோஷமும் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம்

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள், `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம்

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது சூரனை சம்ஹாரம் செய்வதற்கு முன்னால் முருகப் பெருமான் மேற்கொண்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜ பிரபா பிரதோஷம்

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளை கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம். 

18. அஷ்டதிக் பிரதோஷம்

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்டதிக் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றை அருள்வார்கள்.

19. நவகிரகப் பிரதோஷம்

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவகிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவகிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம்

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

No comments:

Post a Comment